தமிழகத்தில் கோடை வெயிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று (ஜூன் 3) முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பின் பல இடங்களில் வெயில் சற்று குறைந்து வருகிறது. மேலும் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. இந்நிலையில் அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று (ஜூன் 3) முதல் ஜூன் 5 வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே போல ஜூன் 6 ஆம் தேதி மற்றும் ஜூன் 7 ஆம் தேதி தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பில் இருந்து 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 3 மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீண்டவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.