Nursing student succumbed to cold and suffocated after falling head in hot water

ஜலதோஷத்திற்காக ஆவி பிடித்த நர்சிங் மாணவி.. மூச்சுத்திணறி வெந்நீரில் தலை கவிழ்ந்து பலி

திருச்செந்தூர்: ஜலதோஷத்திற்காக ஆவி பிடித்த நர்சிங் மாணவி மயக்கமடைந்து வெந்நீர் பாத்திரத்திற்குள் விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே ஆத்தூர், மேலசேர்ந்தபூமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதிநாயகம். இவர் சாகுபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி பழையகாயல், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அகல்யா. இளைய மகள் கவுசல்யா (18). இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு இவர் ஜலதோஷத்தால் அவதிப்பட்டதாக தெரிகிறது. இதனால் மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்வதை விட ஆவிபிடித்தால் சளி வெளியேறும் என்பது நமது பாட்டி வைத்தியமாகும். இதை செய்யலாம் என அந்த மாணவி முடிவு செய்தார். ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீரை நன்றாக காயவைத்து அதில் தைலம் போட்டுள்ளார்.

பின்னர் அதை வீட்டில் ஹாலில் வைத்து காற்று புகாதவாறு அடர்த்தியான பெட்ஷீட்டை போட்டு தன்னை மூடிக் கொண்ட கவுசல்யா , ஆவிப்பிடித்துள்ளார். இதனால் டயர்ட்டான கவுசல்யா மேலும் மேலும் ஆவிபிடித்தார். அப்போது அவருக்கு மூச்சு்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து எதிர்பாராதவிதமாக அந்த வெந்நீர் பாத்திரத்திலேயே தலை கவிழ்ந்து விழுந்து கிடந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டில் பாத்திரம் தேய்த்து கொண்டிருந்த தாய் வீட்டுக்குள்ளே வந்தார். அப்போது நீண்ட நேரமாக ஆவி பிடித்துக் கொண்டிருக்கும் மகளை போதும் என சொல்ல நினைத்து அருகே வந்தார். அப்போது மகள் உட்கார்ந்திருப்பது போல் இல்லாமல் கீழே விழுந்து கிடப்பது போன்று இருந்தது.

உடனே பதறிய தாய், அந்த பெட்ஷீட்டை இழுத்து பார்த்த போது கவுசல்யா அந்த வெந்நீரில் மூழ்கி அசைவற்று கிடந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவுசல்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் சுடுநீரில் விழுந்ததால் கவுசல்யாவின் முகத்தில் தோலுரிந்து காயம் ஏற்பட்டிருந்தது. வெந்நீரில் ஆவி பிடிக்க முயன்ற மாணவி நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஆவி பிடித்தல், வேது பிடித்தலின் போது காற்று உள்ளே புகாத வண்ணம் ஆவி பிடிக்க வேண்டும். ஆனால் நமக்கு மூச்சுத் திணறும்போது சட்டென வெளியே வந்துவிட வேண்டும். இல்லாவிட்டாலும் 5 அல்லது 10 நிமிடங்களுக்கு ஒரு முறை வெளியே வந்து முகத்தில் உள்ள வியர்வையை துடைத்து கொள்ள வேண்டும். முதல் முறையாக இந்த முயற்சி மேற்கொள்வோர் இந்த ஆவி பிடித்தலை நன்கு தெரிந்தவரை வைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

அப்படி செய்திருந்தால் மூச்சுத்திணறும் போது அவர் காப்பாற்றப்பட்டிருப்பார். இல்லாவிட்டால் வெந்நீரில் விழுந்த போதாவது காப்பாற்றப்பட்டு காயத்திற்கு மட்டும் மருந்து போட்டிருக்கலாம். ஆனால் இன்று அந்த உயிரே போய்விட்டது. இதனால் அந்த குடும்பமே பயங்கர சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஆவி பிடித்தல் நல்லதொரு சிகிச்சைதான் என்ற போதிலும் புதிதாக செய்வோருக்கு துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடக்கின்றன. இது குறித்து தெரியாதவர்கள் வேறு சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம் என்கிறார்கள். நெஞ்சு கூட்டு பகுதிகளில் தைலம் தேய்த்தல், சுடுநீர் குடித்தல், தூதுவளை ரசம், துவையல் அரைத்து சாப்பிடுதல் போன்றவற்றை செய்யலாம் என்கிறார்கள்.