தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குபிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 5,866 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்தகொரோனா பாதிப்பு 36,02,215 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 366 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.
தற்போது,3,195 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 138 பேருக்கும், கோயம்புத்தூரில் 55 பேருக்கும், செங்கல்பட்டில் 26 பேருக்கும் கன்னியாகுமரியில் 50 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் தினசரி கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
இந்நிலையில், மக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிப்பு அடையாமல் தங்களை பாதுகாத்து கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்கள் என்னென்ன?
அதன்படி, முதலாவது பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
அவ்வப்போது கைகளை சுத்தமாக சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, உடம்பு வலி, தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோசனை பெற்று கொரோனா பரிசோதனை செய்து, தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குணமடையும் வரை தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த அறிவுரைகளை ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்கள் பின்பற்றி கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து நலமுடன் வாழ ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக 7,830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று பாதிப்பு 5,676 ஆக இருந்த நிலையில் இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 7,946 ஆக இருந்தது. அதன் பிறகு கடந்த 223 நாட்களில் இல்லாத அளவுக்கு தற்போது ஒரு நாள் பாதிப்பு உயர்ந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 1,881 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 919, டெல்லியில் 980, அரியானாவில் 595, தமிழ்நாட்டில் 401, உத்தரபிரதேசத்தில் 402, குஜராத்தில் 364, இமாச்சல பிரதேசத்தில் 420, கர்நாடகாவில் 245, ஒடிசாவில் 212, ராஜஸ்தானில் 190, சத்தீஸ்கரில் 264, பஞ்சாப்பில் 185, ஜார்கண்டில் 108, கோவாவில் 140 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 76 ஆயிரத்து 2 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 4,692 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 4 ஆயிரத்து 771 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 40,215 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்றை விட 3,122 அதிகமாகும்.
கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப்பில் தலா 2 பேர், குஜராத், அரியானா, மகாராஷ்டிரா, சிக்கிம், உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என 11 பேர் இறந்துள்ளனர்.
கேரளாவில் விடுபட்ட மரணங்களில் 5-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது.